Articles
Ramar Pattabhisheka Sargam mp3 Format.
http://www.dailymotion.com/video/xn0o4v_ramar-pattabhishekha-sargam_lifestyle
ஸ்ரீ விநாயகர் துணை,
ஸ்ரீ ராமச்சந்த்ர பரப்ப்ரம்ஹனே நமஹ
ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக சர்க்கம்.
ஸிரஸ்யஞ்சலி மாதாய கைகேயாநந்த வர்த்தன
முபாஷேபரதோஜ்யேஷ்டம் ராமம் சத்ய பராக்ரமம்
பரதன்,தலை மேல் கைகூப்பி மஹா பானுவரான தன் தமையனைப் பார்த்து
பின் வருமாறு சொன்னார்.கைகேயி அந்த வார்த்தைகளைக்கேட்டு முகம் மலர்ந்து பரமானமடைந்தாள்.
ஸ்வாமி, தாங்கள் இந்த ராஜ்யத்தை வேண்டாமென்று வனவாசம் செய்ததால் என்
மாதாவின் மனத்தை சந்தோஷப்படுத்தினீர்கள்.பிறகு சித்திரக்கூடத்தில் இதை
என்னிடத்தில் ஒப்புவித்தீர்கள்.ஆகையால் தாங்கள் என்னிடத்தில் அடைக்கலமாக
வைத்த கோசல ராஜ்யத்தை இப்போது தங்களிடத்தில் மறுபடியும் கொடுத்துவிட்டேன்.
ஆனால்,நான் கேட்ட போது நீ கொடுக்கலாம், அது வரையில் நீயே வைத்துக்கொண்டிரு,
நான் அயோத்யையில் சகல போகங்களையும் அனுபவித்துக்கொண்டு சுகமாய்
வசிக்கிறேன்.நீயே ராஜ்யத்தை ஆண்டு வா என்று சொல்வீர்கள்.
பூரண பலமுள்ள ஒரு எருது தனியாய் சஹாயமில்லாமல் சுமந்து வந்த பாரத்தை சிறு கன்றுக்குட்டி சுமக்குமா?!!!
அப்படியானால் இது வரையில் எப்படி ஆண்டுவந்தாய்?!!!என்று
கேட்பீர்கள்!!!ஆற்றில் ஜலத்தில் வேகத்தை தடுப்பதற்கு மரக்கிளைகள், வைக்கோல்
,மரம், முதலிய பதார்த்தங்களால் உறுதியாய் அணை கட்டிவிட்டால் அங்கங்கே சிறு
துவாரங்கள் ஏற்ப்பட்டு ,அவைகளின் வழியாய் ஜலம் ப்ரவாஹித்து முடிவில் அணையை
அடித்துக்கொண்டு போவது போல்,இந்த ராஜ்ய பாலனம் சுலபமல்ல...
ஆளுகிறவனுக்கு உத்தம குணங்களென்ற பலமான அணையில்லாவிட்டால், ராஜ்ய ரகசியங்கள் சீக்கிரத்தில் வெளிப்படும்.
ஆனால், என்னைப்போல நீயும் பிரஜைகளை உத்தம குணங்களால் வசப்படுத்தக் கூடாதா?!!! என்பீர்கள்.
உத்தம அசுவத்தின் நடைக்கும், கழுதையின் நடைக்கும் உவமையுண்டோ?!!! காக்கை ராஜ அம்சத்தை போலாகுமா?!!!
தாங்கள் போகும் வழியில் வேறொருவர் அடியெடுக்க முடியுமோ?!!!
ஆனால், நானும் உனக்கு சஹாயமாயிருக்கிறேன்,நீயே ராஜ்யத்தை ஆண்டுவா !!! என்பீர்கள்.
ஒரு வீட்டில் வளர்த்த மரம்,விசாலமான கிளைகளுடன் அதை வளர்த்தவனுக்கு என்ன பிரயோஜனம்?
நமது பிதா,அறுபதாயிரம் வருஷங்கள் வரையில், புத்திரனில்லாமல்
அசுவமேதம்,புத்திர காமேஷ்டி யாகம் முதலிய யாகங்களைச் செய்து தங்களைப்
பெற்றார்.தாங்கள் லோகோத்தமமான அனந்த கல்யாண குணங்களுடன் வளர்ந்து
வந்தீர்கள்.இந்த ராஜ்யத்தை தங்களிடம் ஒப்புவித்து தான் செய்த
பிரயத்தினங்களின் பலனை,அனுபவிக்கலாமென்று அவர் நினைத்தார்.
இப்போது சகல பூமண்டலத்தையும் தர்மமாகப் பரிபாலனம் செய்யத் தகுந்த உத்தம
குணங்கள்,தங்களிடத்தில் இருந்தும் வம்ச பரம்பரையாய் ஜ்யேஷ்ட புத்திரர்களால்
ஆளப்பட்டு வந்த ராஜ்யத்தை, தாங்கள் ஆளாவிட்டால்,தங்களைப் பெற்று வளர்த்ததி
பிரயோஜனமென்ன?
சூரியன் மத்யான காலத்தில்,ஆகாசவீதியில் ,பூர்ண கிரஹங்களுடன் ,சகல
ஜகத்திற்கும் ,பிரகாசத்தையும்,ஆயுளையும் கொடுத்துக் கொண்டு விளங்குவது
போல்,தாங்கள் பட்டாபிஷேக,மஹோத்சவம்,பெற்று சிம்மாசனத்திலிருந்து,
எங்களெல்லோருக்கும், ஷேமத்தை கொடுப்பதை நாங்கள் பார்த்து மகிழ்கிறோம்.
விடியற்காலத்தில் மதுரமான கானங்களாலும், வாத்ய சப்தங்களாலும், தங்கச்
சலங்கைகளாலும், அலங்கரிக்கப்பட்ட உத்தம ஸ்திர்களின் நாட்டியங்களாலும்,
தாங்கள் எழுப்பப்படுவதை, நாங்கள் கண்டு மகிழ்கிறோம். சகல போகங்களையும்
அனுபவிக்கத் தகுந்தவர்கள் தாங்களே,!!!
ஆனால், உங்களுக்கு ராஜ்யபாலனம் செய்ய ஆசையில்லையோ? என்று கேட்பீர்கள்,
சூரியன், சந்திரன்,கிரஹங்கள்,நட்சத்திரங்கள் முதலியன உள்ளவரையிலும்,
தாங்கள் எங்களை பரிபாலனம் செய்ய வேண்டுமென்பதே எங்கள் பிரார்த்தனை என்றார்.
ராமன் பரதனுடைய சரணாகதியை அங்கீகரித்து,உத்தமமான ஆசனத்தில் உட்கார்ந்தார்.
பிறகு சுகமாயும், சீக்கிரமாயும். சாதுரயமாயும்,ஷவரம் செய்யக்கூடியவர்களை
சத்ருக்கனர் தருவிக்க, அவர்கள் ராம,லட்சுமண,பரத சத்ருக்கனர்களுடைய ஜடைகளை
நீக்கினார்கள்.
பரதன், லட்சுமணன், சுக்ரீவன், விபீஷணன்,முதலியவர்கள் ஸ்நானம் செய்த பிறகு
விசித்திரமான மாலைகளாலும், பரிமளங்களாலும், வஸ்திரங்களாலும்,
ஆபரணங்களாலும், ராம லட்சுமணர்களை சத்ருக்கணன், அலங்காரம் செய்வித்தார்.
தசரதருடைய பத்தினிகள் சீதைக்கு சகல அலங்காரங்களையும்,தாங்களே செய்தார்கள்.
தாரை முதலிய வானர ஸ்த்ரீகளுக்கு அலங்காரங்களையும்,ராமனிடத்தில்
ராமனிடத்தில் எல்லையற்ற வாத்சலயத்தை வைத்த கௌசல்யை செய்வித்தாள்.பிறகு
சத்ருகனருடைய உத்தரவால்,இஷ்வாகு குல சாரதியான. சுமந்திர் உத்தம அசுவங்கள்
பூட்டிய ராஜ ரதத்தை கொண்டுவந்து நிறுத்தினார்.
சூரிய மண்டலத்தைப் போல் பிரகாசிக்கும் அந்த ரதத்தில் ராமன்
ஏறினார்.சுக்ரீவனும் ,ஹனுமானும் மஹேந்திரனைப் போல் தேஜசால் ஜ்வலித்துக்
கொண்டு நேர்த்தியான வஸ்திராபரனங்களால் அலங்கரிக்கப்பட்டு,ராமனுடன்
போனார்கள். சுக்ரீவனுடைய பார்யைகளும், சீதையும்,திவ்யாலங்காரங்களுடன்
அயோத்யையைப் பார்க்க அவர்களுடன் போனார்கள்.
பிறகு அயோத்யையில் ,தசரதருடைய மந்திரிகளும் வஷிஷ்டரும், ராமனுடைய பட்டாபிஷேகத்திற்கு வேண்டிய மங்கள திரவியங்களை சம்பாத்தித்தார்கள்.
அசோகன், விஜயன், சுமந்திரன், முதலியவர்கள் ராமனுக்கு,சுகமும் ஐசுவர்யமும்,
விருத்தியாவதற்கும் , இந்த நகரமும் ராஜ்யமும் , எப்போதும் மஙகளத்தை
அடைவதற்கும், வேண்டிய சகல சுபக் கிரியைகளையும் குறைவில்லாமல் செய்ய
வேண்டியது , என்று வஷிஷ்டரை பிரார்த்தித்து, ராமனைப் பார்ப்பதற்காக
திரும்பி வந்தார்கள்.
திவ்ய அசுவங்கள் பூட்டிய ரதத்தில், மாதலி சாரத்யம் செய்ய,தேவ கனங்கள் புடை
சூழ , இந்திரன் வருவது போல் திவயமான ரதத்தில் , சுமந்திரன் சாரத்யம்
செய்ய, சகோதரர்களும், வானரர்களும், ராக்ஷசர்களும், பிரஜைகளும்,புடை
சூழ,ராமச் சந்திரன் விளங்குவதைக் கண்டார்கள்.
பரதன் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு சுமந்திரருக்குப் பக்கத்திலிருந்து
சாரத்யம் செய்து வந்தார்.சத்ருக்கனன் இஷ்வாகு சக்ரவர்த்திகளுடைய
வெண்குடையைப் பிடித்தார்.லட்சுமணன் ராமனுக்கு முன் நின்று வெண்சாமரத்தை
வீசினார்.ராஷசபதியான விபீஷனன் மற்றொரு வெண்சாமரத்தை வீசினான்.
அப்போது ஆகாச வீதியில் , தேவர்களும் ,ரிஷிகளும்,மருத் கணங்களும், ராவணாதி
ராஷசர்களை நாசம் செய்து தங்களுக்கு,எல்லையற்ற சுகத்தையும் ஷேமத்தையும்,
கொடுத்ததைப் பற்றி,ராமனைக் கொண்டாடும், மதுரமான த்வனி கேட்கப்பட்டது, மஹா
பர்வதத்தைப் போல், மத ஜலத்தைப் பெருக விட்டுக் கொண்டிருக்கும்,
சத்ருஞ்செயன் என்ற பட்டத்து யானையின் மேல் விளங்கும்,இந்திரனைப் போல்
பிரகாசித்தான்.
இதர வானரர்கள்,மனுஷ்ய ரூபத்துடன் ,ஸ்ர்வாபரண பூஜிதர்களாய், ஒன்பதாயிர மத
யானைகளின் மேல் ஏறி வந்தார்கள். இப்படி, சங்கம்,
பேரீ,துந்தபி,வீணை,மிருதங்கம்,முதலிய வாத்ய கோஷங்களுடன் ரகுவீரன் அயோத்யையை
நோக்கிப் போனார்.
மந்திரிகள் அவரை, ஜய விஜயீ பவ, என்று வாழ்த்தி அவரால் உபசரிக்கப்பட்டு,
அவரைப் பின் தொடர்ந்து வந்தார்கள். பிரஜைகளாலும் , பிராமணர்களாலும்,
மந்திரிகளாலும் சூழப்பட்டு,ராகவன் ஆகாச வீதியில் ,நட்சத்திரங்களால்,
சூழப்பட்ட சந்திரனைப்போல பிரகாசித்தார்.
அவருக்கு முன் அநேகர், மங்கள் வாத்தியங்களை கோஷித்துக்கொண்டு
சென்றார்கள்.ஸ்வஸ்திகம் முதலிய மதுரமான வாத்தியங்களை,அநேகர்
வாசித்துக்கொண்டு போனார்கள்.கன்யைகளும் பிராமணர்களும்,மஞ்சள் கலந்த
அட்சதைகளை, எடுத்துக்கொண்டு முன்னே போனார்கள்.
உத்தம லட்சணங்களுள்ள பசுக்கள் சென்றன.ராமனுக்கும் சுக்ரீவனுக்கும், நேர்ந்த
ஸ்நேகத்தையும், வாயு புத்திரனுடைய பிரபாவத்தையும், வானரர்களுடைய
,பராக்கிரமத்தையும், ராஷசர்களுடைய பலத்தையும், விபீஷனனுடைய, சஹாயத்தையும்,
ராமன் மந்திரிகளுக்கு விஸ்தாரமாக எடுத்துச் சொன்னார். அதைக்கேட்டு, நகரத்து
ஜனங்கள் ஆச்சர்யமடைந்தார்கள்.
இப்படிப் பேசிக் கொண்டே சகல சௌக்கியங்களும் பொருந்தின, ஜனங்களால்,
அலங்கரிக்கப்பட்ட, அயோத்யையில் ராமன் பிரவேசித்தார். ஒவ்வொரு வீட்டிலும்
மாலைகளாலும், ஹாரங்களாலும், தோரணங்களாலும், கொடிகளாலும், த்வஜங்களாலும்,
விசித்திரமாய், அலங்கரிக்கப்பட்டிருந்தது.ராமன் பிரஜைகளால் வாழ்த்தப்பட்டு,
இஷ்வாகு வம்சத்தார்கள் வசிக்கும்,அரண்மனையில் பிரவேசித்தார்.
கௌசல்ய, சுமித்திரை, கைகெயி முதலிய ராஜ பத்தினிகளை நமஸ்கரித்து, பரதனை
நோக்கி, அழகான அசோகத் தோட்டத்துடன் விளங்கும் உத்தமமான என்
அரண்மனையில்,சுக்ரீவன் தங்கட்டும் என்றார்.
அவருடைய அபிப்ராயத்தை, பரதன் அந்த வார்த்தைகளால் அறிந்து கொண்டு,
சுக்ரீவனுடைய கையைப் பிடித்து அந்த அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்.
பிறகு, பரிசார்கர்கள், சத்ருக்கனனுடைய உத்தரவால், தீபங்களையும்,
ஆசனங்களையும், விரிப்புகளையும்,படுக்கைகளையும்,அந்த அரன்மனையில் கொண்டு
போய் வைத்தார்கள். பிறகு சத்ருக்கனன், சுக்ரீவனைப் பார்த்து, பிரபோ!!!,
ராமனுடைய அபிஷேகத்திற்காக வானரர்களை அனுப்புங்கள் என்றார். நான்கு வானர
சிரேஷ்டர்களை அழைத்து ரத்தினங்களிழைத்த, நான்கு ஸ்வர்ன கடங்களைக் கொடுத்து,
வானரர்களே!!!!, பொழுது விடியும் முன்,நான்கு திக்குகளிலுள்ள,
சாகரங்களிலிருந்தும்,புன்ய தீர்த்தங்களிலிருந்தும்,பரிசுத்தமான ஜலத்தைக்
கொண்டு வந்து சித்தமாக இருக்க வேண்டும் என்று ஆக்ஞாபித்தான், உடனே,மத
யானைகளைப் போன்ற வானர வீரர்கள், ஆகாசத்தில் கிளம்பி கருடனைப் போல
அதிவேகமாய்ப் போனார்கள்.தங்கக் கலசங்களில் ஐநூறு நதிகளிலிருந்து ,புண்ணிய
தீர்த்தங்களைக் கொண்டு வந்தார்கள்.
சுஷேஷனண்,கிழக்கு சமுத்திரத்திலிருந்தும்,
ரிஷபன்,தெற்கு சமுத்திரத்திலிருந்தும்,
கவயன்,மேற்கு சமுத்திரத்திலிருந்தும்,
நளன்,வடக்கு சமுத்திரத்திலிருந்தும்,
ஜலத்தைக் கொண்டு வந்தார்கள்.
வானரர்கள் ராமனுடைய அபிஷேகத்திற்காகப்,புண்ணிய ஜலங்களைக் கொண்டு
வந்தார்களென்றறிந்து, சத்ருக்கனனும், மந்திரிகளும், வஷிஷ்டருக்கும், இதர
ஸ்நேகிதர்களுக்கும் தெரிவித்தார்.
ஸ்ரீ ராம பட்டாபிஷேக சர்க்கம்:-
தத ஸ ப்ரயதோ வ்ருத்தோ வஷிஷ்டோ பராஹ்மனை ஸஹ
ராமம் ரத்னமயே பீடே ஷஹஸீதம் ந்யவேசயத்
வஷிஷ்டம் வாம தேவ ச ஜாபாலிரத காயப
காத்யாயன ஸுயஜஞ்ச கௌதமோ விஜயஸ்ததா
அப்யஷிஞ்சந் நரவ்யாக்ரம் ப்ரசந்த்னேன ஸ்கந்தினா
ஸலிலேன ஸஹஸ்ராஷம் வஸவோ வாஸவம் யதா
ரித்விக்பி ப்ராஹ்மனை பூர்வம் கன்யாபிர் மந்த்ரிபிஸ்ததா
யோதை சைவாப்யஷிஞ்சம்ஸ்தே ,ஸம்ப்ரஹ்ருஷ்டா ஸனைகமை
பிறகு இஷ்வாகு குல சக்கரவர்த்திகளுக்குக் குருவும்
தீர்க்காயுள்ளுள்ளவருமான வஷிஷ்ட மஹரிஷி இந்திரியங்களையும், மனத்தையும்,
சமாதானம் செய்து, சகல பிராம்மணர்களுடைய , அனுமதியைப் பெற்று, ஸ்ரீ ராமனை
சீதா தேவியுடன் ரத்ன மயமான சிம்மாசனத்தில் உட்காரச்செய்தார்,
தேவேந்திரனை அஷ்ட வஸுக்கள் அபிஷேகம் செய்தது போல் வாமதேவர் ஜாபாலி ,
காஷ்யபர், காத்யாயனர், சுயஞ்சர், கௌதமர்,விஜயர் என்ற எட்டு மஹாத்மாக்களும்,
வேதோக்த மந்திரங்களை ஜபித்து ,ஸ்ரீ ராம சந்திரனை பரிமளத் திரவியங்கள்,
கலந்த புண்ணிய தீர்த்தத்தால், விதிப்படி, பட்டாபிஷேகம் செய்தார்கள்.
பிறகு சகல ஔஷதிகளும் ரசங்களும் கலந்த புண்ணிய ஜலத்தால், ரித்விக்குகளும்
யுத்த வீரர்களும், வர்த்தகத் தலைவர்களும் ரகுவீரனை அபிஷேகம் செய்தார்கள்.
ஆகாச வீதியில் லோக பாலகர்களும்,தேவ கணங்களும்,நின்று ஆனந்தமாய்
கொண்டாடினார்கள். சத்ருக்கனன் வெண்குடை பிடித்தார். சுக்ரீவன் வெண்சாமரம்
போட்டார். இந்திரனால் அனுப்பப்பட்ட வாயு பகவான் , எண்ணிறந்த தங்கத் தாமரைப்
புஷ்பங்களால் , அமைக்கப்பட்ட ஒரு பிரகாசமான மாலையையும், நவரத்தினங்கள்
கலந்த ஒரு முத்து ஹாரத்தையும், கொண்டு வந்தார்.
தேவ கந்தர்வர்கள் அந்த மஹோத்சவ சமயத்தில் மதுரமாய் பாடினார்கள்.அப்சரஸ்
கனங்கள் சாதுர்யமாய் நாட்டியம் செய்தார்கள்.சமஸ்த பயிர்களால்,பூமி
செழித்தது. விருஷங்கள் பழங்களால் நிறைந்தன, புஷ்பங்களிலிருந்து நேர்த்தியான
பரிமளங்கள் வீசிற்று.எண்ணிறந்த பசுக்களையும், கன்றுகளையும்,
காளைகளையும்,குதிரைகளையும்,முப்பது கோடி தங்க நாணயங்களையும், பலவித
ஆபரணங்களையும், வஸ்திரங்களையும், ரகுநாதன் பிராமணர்களுக்கும், மற்ற
ஜாதியர்களுக்கும் கொடுத்தார்.
நவரத்தினங்களிழைத்து, சூரியனைப் போல் பிரகாசிக்கும் ஒரு தங்க ஹாரத்தை
ராகவன் சூரிய புத்திரனான, சுக்ரீவனுக்கு கொடுத்தார். வாலி புத்திரனான
அங்கதனுக்கு,நவரத்தினங்களிழைத்த இரண்டு அங்கதங்களை [அதாவது தோள் வளைகளைக்]
கொடுத்தார்.
சந்திர கிரணங்களைப் போல ஒளி வீசும் ரத்தினங்கள் கலந்த ஒரு முத்து ஹாரத்தை
சீதைக்கு கொடுத்தார். அவள் இரண்டு உத்தமமான வஸ்திரங்களையும், அநேக
ஆபரணங்களையும்,பர்த்தாவின் அனுமதியை கண்ஜாடையால் அறிந்து ஆஞ்சநேயருக்கு
கொடுத்தாள்.
பிறகு தன் கழுத்திலிருந்து அந்த ஹாரத்தை கழற்றி, சகல வாணரர்களையும் தன்
பர்த்தாவையும், சீதை அடிக்கடி பார்த்தாள்.ராமன் அவளுடைய கருத்தை
அறிந்து.சீதே!!! எவனிடத்தில் உனக்கு விஷேஷ திருப்தி இருக்கிறதோ?
எவனிடத்தில் ஆண்மையும், பராக்கிரமும் புத்தியும், எல்லையற்று
விளங்குகின்றனவோ, அவனுக்கு இதை வெகுமானமாகக் கொடு என்றார்.
உடனே சீதை, அந்த ஹாரத்தை ஆஞ்சநேயருடைய கழுத்தில் போட்டாள். ஆதலால் சந்திர
கிரணங்கள் சூழ்ந்த வெண்மையான மேகங்களால் விளங்கும்,பர்வதத்தைப் போல் அவர்
பிரகாசித்தார். மைந்தன் ,த்விவிதன், நீலன், முதலிய சகல வாணரர்களுக்கும்
அவரவர்களுடைய உத்தம குணங்களுக்கு தகுந்த படி, வஸ்திரங்களையும்,
பூஷணங்களையும் அபரிதமாகக் கொடுத்தார்.
விபீஷணன்,சுக்ரீவன்,ஹனுமான்,ஜாம்பவான் முதலிய வானர
வீரர்கள்,ரத்தினங்களாலும் வெகுமதி செய்யப்பட்டுத் தங்கள் இருப்பிடம்
போனார்கள். வானரர்கள் அந்த பட்டாபிஷேக மஹோத்சவத்தைக் கண்டு
களித்து,ராமனிடத்தில் உத்தரவு பெற்றுக் கொண்டு கிஷ்கிந்தைக்குச்
சென்றார்கள்.
ராஷசாதிபதியான விபீஷணன் ,இஷ்வாகு
வம்சத்தவர்களுக்குக், குலதனமான ஸ்ரீ ரங்க விமானத்தை, ராமனிடத்திலிருந்து
பெற்று, லங்கைக்குப் போனான். விபீஷனன் சகல சத்ருக்களையும் ஜயித்து மஹா
கீர்த்திசாலியாய் தர்ம ராஜ்யம் செய்து வந்தான். ராமன் பிரஜைகளைத் தன்
குழ்ந்தைகளைப்போல் பாதுகாத்து துஷ்ட நிக்ரஹ சிஷ்டபரிபாலனம் செய்து வந்தார்.
பிறகு,
லட்சுமணா,தர்ம ரஹஸ்யங்களை அறிந்த புத்திமானே!!! நமது முன்னோர்களால்
ஆளப்பட்டு வந்த இந்த ராஜ்யத்தை, என்னுடன் நீயும் பரிபாலனம் செய்!!!.உன்னை
யுவராஜாவாக நியமிக்கிறேன்,. என்றார்.
அவர் எவ்வளவு சொல்லியும்,லட்சுமணன் கொஞ்சமாவது சம்மதிக்காததால் பரதனுக்கு
யௌவராஜ்யப் பட்டாபிஷேகம் செய்வித்தார். பௌண்டரீகம் , அஸ்வமேதம், வாஜபேயம்,
முதலிய, யாகங்களைக் கணக்கில்லாமல் செய்தார். பதினோராயிர வருஷங்கள் வரையில்
ராஜ்யத்தை ஆண்டார்.
அபரிதமான தக்ஷிணைகளுடன் எண்னிறந்த அசுவமேத யாங்களைச் செய்தார்.முழங்கால்
வரையில் நீண்ட திருக்கைகளுடனும் மேருமலை போன்ற திருமார்புடன்,மஹாப்
பிரதாபசாலியாய் லட்சுமணால் எப்போதும் உபசரிக்கப்பட்டு லோகத்தை ஆண்டார்.
பந்துக்களுடனும் மித்திரர்களுடனும் பலவகை ய்க்ஞங்களைச் செய்து முடித்தார்.
அவருடைய ராஜ்யத்தில் ஸ்த்ரீக்கள் புருஷனை இழந்து வருத்தப்பட்டதில்லை.
துஷ்ட மிருகங்களால். உபத்திரவமில்லை. வியாதியால் பீடிக்கப்பட்டவர்களில்லை.
திருடர்களால் பயமில்லை. ஒருவனுக்கும் கஷ்டமென்பது நேரவில்லை. அகாலத்தில்
ஒருவரும் மரணமடையவில்லை. எல்லோரும் சந்தோஷமாய் காலம் கழித்தார்கள்.
எல்லோரும் தர்மத்திலேயே நாடின மனமுடையவர்களாக இருந்தார்கள்.
தர்ம ஸ்வரூபியான ராமனுடைய ஆசாரத்தையே, பிரஜைகளும் அனுசரித்து
,ஒருவரையொருவர் உபத்ரவிக்கவில்லை.அநேக ஆயிரம் வருஷங்கள் ஜீவித்திருந்து
ஆநேக ஆயிரம் புத்திரர்களுடன் வியாதியில்லாமலும், சோகமில்லாமலும்
வாழ்ந்தார்கள். ராமன் ராஜ்யத்தை ஆளும் போது,எங்கே பார்த்தாலும் ராமன்
ராமனென்றே எல்லோரும் அவருடைய சரித்திரங்களை வர்ணித்து அவரையே
கொண்டாடினார்கள்.
ஜகத் முழுவதிலும் ராம மயமாயிற்று, எந்த ருதுவிலும் விருஷங்கள் விசாலமான
கிளைகளுடனும், பழங்களுடனும் செழித்தன.மேகங்கள் அந்தந்த காலத்தில் மழி
பெய்தன.காற்று சுகமாய் வீசிற்று.
பிராம்மணர்களும்,சத்ரியர்களும்,வைஸ்யர்களும்,சூத்திரர்களும்,பேராசையவற்றவர்களாய்
தங்களுடைய வர்ணாசிரம தர்மங்களை திருப்தியாயும், சந்தோஷமாயும் ,நடத்தி
வந்தார்கள். சகல பிரஜைகளும் தர்மத்தில் பிரியமுள்ளவர்களாயும் சுப
லக்ஷணங்கள் பொருந்தியவர்களாயும் இருந்தார்கள்,ஸ்ரீராமன் சகோதரர்களால்
உபசரிக்கப்பட்டு பதினோராயிர வருஷங்கள்,வரையில் நிகரற்ற காந்தியுடன் ராஜ்ய
பரிபாலனம் செய்தார்.
வாலிமீகி மஹரிஷியால், ஆதியில் செய்யப்பட்ட இந்த காவியம்,
தனத்தையும்,கீர்த்தியையும்,ஆயுளையும் அரசர்களுக்கு கொடுக்கும்,இதைப்
படிப்பவனும் கேட்டவனும், பாபத்திலிருந்து விடுபடுகிறான். ராமனுடைய
பட்டாபிஷேக மஹோத்சவக் கதையை கேட்பவன்.புத்திரர்களை விரும்பினால்
புத்திரர்களை அடைகிறான். தனத்தை விரும்பினால் தனத்தை அடைகிறான்.
அரசன் சத்ருக்களை ஜயித்து லோகத்தை
ஆளுகிறான்.ஸ்தீகளாயிருந்தால் கௌசல்யை ராமனையும்,சுமித்திரை
லட்சுமண,சத்ருகனனையும்,கைகேயி பரதனையும்,அடைந்தது போல தீர்க்காயுளுள்ள
உத்தம புத்திரர்களை அடைகிறார்கள்.
இந்த ராமாயணத்தையும் ராமனுடைய விஜயத்தையும், கேட்கிறவன் தீர்க்காயுளைப்
பெறூகிறான்.வால்மீகி மஹரிஷியால் செய்யப்பட்ட இந்தக் காவியத்தை காமக்
குரோதங்களை அடக்கிச் சிரத்தையுடன் கேட்கிறவன்.சகல கஷ்டங்களையும்
தாண்டுகிறான்,தூர தேசத்துக்குப் போயிருந்தால் தன் புத்திர மித்திர
பந்துக்களுடன் சேருகிறான். ரகுநாதனிடத்திலிருந்து வேண்டிய வரங்களைப்
பெறுகிறான்.
இந்த ராமாயணத்தை கேட்பவனிடத்தில் சகல தேவதைகளும் ப்ரீதி
வைக்கிறார்கள்.அவனுடைய கிருஹத்திலிருக்கும்,விநாயகர்களென்ற தேவதைகள்
பிரசன்னமாகின்றன.அரசன் பூமியை ஜயிப்பான்.தேசாந்திரம் போனவன் ஷேமமாய் வந்து
சேருவான்.யௌவன ஸ்திரிகள் உத்தமமான புத்திரர்களைப் பெறுவார்கள்.
இதை பூஜித்துப் படித்தால், பாவங்கள் நீங்கி,தீர்க்காயுளை அடைவார்கள்.
சத்திரியர்கள் எப்போதும் இந்தப் புண்ணிய சரித்திரத்தை நமஸ்கரித்து
பிராமணர்களிடமிருந்து கேட்க வேண்டியது. அவர்களுக்கு அளவற்ற ஐஸ்வர்யமும் ,
புத்திரலாபமும் கிடைக்கும்.
இந்த ராமாயணம் முழுவதையும் எப்போதும் ஒருவன் கேட்டாலும், படித்தாலும்,ஸ்ரீ
ராம மூர்த்தி அவனிடத்தில் அழிவற்ற ப்ரீதியை வைக்கிறார். அவர் அநாதியான மஹா
விஷ்ணுவல்லவா?ஆதி தேவனும் மஹானுபாவரும்,சர்வேசுவரனுமான ஸ்ரீமந் நாராயணனே
ஸாஷாத் ராமனாயும், அவருக்கு வாகனமான ஆதிஷேஷனே லட்சுமணணாயும்
அவதரித்தார்கள்.
இந்த மங்களகரமான காவியத்தைக் கேட்கிறவர்களுக்குக் குடும்ப விருத்தியும்,தன
தான்ய விருத்தியும்,உத்தமமான சுகமும் கிடைக்கும்.சகல புருஷார்த்தங்களும்
கைக்கூடும். சகல் மனோரதங்களும் நிறைவேறும். உத்தமமான ஸ்திரீகளை அடைவார்கள்.
தீர்க்காயுளும் தேகாரோக்கியமும், கீர்த்தியும் சகோதரர்களின் ஒற்றுமையும்
தீஷ்ணமான புத்தியும்,அழிவற்ற சுகமும்,கிடைக்கும்,தேஜசைக் கொடுக்கும். இந்த
கிரந்தத்தை ஐசுவர்யத்தை விரும்பும் , ஒவ்வொருவரும் நியமத்துடன் கேட்க
வேண்டியது.
வெகுகாலத்திற்கு முன் நடந்த இந்தச் சரித்திரம் உங்களுக்கு மங்களகரமாக
இருக்கட்டும். விஷ்ணுவினுடைய சக்தி லோகங்களில் விருத்தியடையட்டும் என்று
நிச்சயமாய்ச் சொல்லுங்கள். ராமாயணத்தை படிப்பதாலும் கேட்பதாலும் சகல
தேவர்களும், பித்ருக்களும், சந்தோஷமடைகிறார்கள். வேத சம்ஹிதைக்கு சமமான
இந்த வால்மீகி ராமாயணத்தை பக்தியுடன் எழுதுகிறவர்கள், எந்நாளும்
ஸ்வர்க்கத்தில் வசிப்பார்கள்.
பக்த்யா ராம்ஸ்ய யே சேமாம் சம்ஹிதாம் ரிஷினாக்ருதாம்
கேயந்தீஹ ச நரா தேஷாம் வாஸஸ் த்ரிவிஷ்டபே
ராம ராம ராம
ஜெய் ஸ்ரீராம்
===*****===
ராமாயணம் முழுவதும் பிடிஎஃப் கோப்பாக படிக்க,தரவிறக்க:-
